×

வழக்கிலிருந்து ஆசிரியர்கள் நீக்கம் மதியின் தாயாரிடம் குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம், ஜூன் 6: வழக்கிலிருந்து ஆசிரியர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மதியின் தாயாரின் கோரிக்கையை ஏற்று குற்றப்பத்திரிக்கை நகலை விழுப்புரம் கோர்ட் வழங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மதி கடந்த ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகளான கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேர் மீது 1,150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த 15ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை நகல்கேட்டு விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருகை தந்த மதியின் தாய், இந்த வழக்கிலிருந்து பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகியோரை நீக்கியுள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்கு சிபிசிஐடி போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக வரும் 5ம்தேதி(நேற்று) எனது கருத்தை தெரிவிக்குமாறு விழுப்புரம் நீதிமன்றம் கடந்த 22ம் தேதி எனக்கு மனு அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீதிமன்றத்தில் நான் எப்படி கருத்தை தெரிவிக்க முடியும். ஒருதலைப்பட்சமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஒரு நபர் விசாரணை கமிஷன் நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனிைடயே சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்குவதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை. நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று தாய் செல்வி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை நகல்கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி, குற்றப்பத்திரிக்கை நகல் வழங்க ஒப்புதல் தெரிவித்தார். பின்னர் மாலையில் செல்வியிடம் குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது. இதனைபடித்து பார்க்க வேண்டியிருப்பதால் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் அளித்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post வழக்கிலிருந்து ஆசிரியர்கள் நீக்கம் மதியின் தாயாரிடம் குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Mathi ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...